Thursday, February 2, 2023

Sandhyavanda mantras

 #ஸந்த்யாவந்தனம்_மந்த்ரங்கள்_அர்த்தத்துடன்


ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள்

(அர்த்தத்துடன்)


ப்ரஹ்மா, அவர் செய்த த்யானத்தின் முதிர்ந்த பயனாகத் தோன்றிய பரதேவதைக்குப் பெயர் “ஸந்த்யா”! அவளை ஹ்ருதய ஆகாசத்திலும், பேராகாசத்திலும் அன்றாடம் உதித்து அஸ்தமிக்கும் ஸூர்யனிடத்திலும் வந்தனம் செய்தலே ஸந்த்யாவந்தனம். இதை ஸம்ஸ்க்ருதத்தில் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்:


ब्रह्मणो द्यायतो यस्मात् सम्यक् जाता वराङ्गना ।

अतः सन्ध्येति लोकेऽस्मिन् अस्याः क्यातिर्भविष्यति ॥


ப்ரஹ்மணோ த்யாயதோ யஸ்மாத் ஸம்யக் ஜாதா வராங்கனா |

அத: ஸந்த்யேதி லோகேऽஸ்மின் அஸ்யா: க்யாதிர் பவிஷ்யதி ||


மும்மூர்த்திகளின் முழுச் சக்தியும் திரண்ட வடிவாய் நின்று அனைத்து உலகங்களையும் தோற்றுவித்து, ஆட்டுவிப்பதாக இருந்தாலும், மாயைக்கப்பால் நிஷ்கலமாக இருக்கின்ற எந்த பரதத்துவமுண்டோ, அதற்கு “ஸந்த்யா” என்று பெயர்.


நாம் அனைவரும் தினந்தோறும் ஸந்த்யாதேவியை உபாஸிக்க வேண்டும். உதிக்கும்போதும், அஸ்தமிக்கும்போதும் ஸூர்யனை “இவனே ப்ரஹ்மம்” என்று த்யானம் செய்யும் வித்வானாகிய ப்ராஹ்மணன் எல்லா நன்மைகளையும் அடைகிறான்.


ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் எப்போதும் அசுத்தமானவன். எக்கருமத்திற்கும் தகுதியற்றவன். (ஸந்த்யாஹீநோऽசுசிர் நித்யம் அனர்ஹ: ஸர்வகர்மஸு). பிறப்பு மற்றும் இறப்புகளால் உண்டாகும் தீட்டு காலங்களிலும் ப்ராஹ்மணன் ப்ராணாயாமமின்றி மனத்தால் மந்த்ரங்களை உச்சரித்து, ஸந்த்யாவந்தனத்தை விட்டு விடாமல் செய்ய வேண்டும்.


ஸந்த்யாகாலத்தில் தூங்குவதோ, சாப்பிடுவதோ, படிப்பதோ கூடாது.


பாகம்-1


இனி, ஸந்த்யாவந்தனத்தின் பூர்வ பாக: இதில் நாம் முதலில் காண இருப்பது, “ஆசமநீயம்”


ஆசமநம் ||1||

அச்யுதாய நம: (அச்சுதனுக்கு நமஸ்காரம்)

அநந்தாய நம: (அநந்தனுக்கு நமஸ்காரம்)

கோவிந்தாய நம: (கோவிந்தனுக்கு நமஸ்காரம்)


இனி, விஷ்ணுவின் பன்னிரு திருநாமங்களால் நம் உடலின் இந்த்ரியங்களனைத்துக்கும் ரக்ஷை இடுதல்:


கேசவ, நாராயண – கட்டைவிரல், வாய் இவ்விரண்டும் அக்நியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, கட்டை விரலால் வலது இடது கன்னங்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.


மாதவ, கோவிந்த – பவித்ர விரல் (மோதிர விரல்), கண்கள் இவ்விரண்டும் ஸூர்யனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, பவித்ர விரலால் நமது இரு கண்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.


விஷ்ணோ, மதுஸூதந – ஆள்காட்டி விரல், நாசி இவ்விரண்டும் வாயுவின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, ஆள்காட்டி விரலால் நாசியின் இருபுறங்களிலும் (பெண்கள் மூக்குத்தி போட்டுக் கொள்ளுமிடங்கள்) ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.


த்ரிவிக்ரம, வாமந – சுண்டுவிரல், காதுகள் இவ்விரண்டும் இந்த்ரனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, சுண்டுவிரலால் வலது இடது காதுகளை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.


ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – நடுவிரல், தோள்கள் இவ்விரண்டும் ப்ரஜாபதியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, நடுவிரலால் வலது இடது தோள்களை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.


பத்மநாப, தாமோதர – உள்ளங்கை, ஹ்ருதயம் மற்றும் உச்சந்தலை இவை இறைவன் உறையுமிடங்கள். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, உள்ளங்கையால் ஹ்ருதயத்தையும் உச்சந்தலையையும் ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.


இந்த ஆசமநீய மந்த்ரங்களின் அர்த்தத்தை முழுமையாக இவ்வாறு உரைக்கிறேன்:

அச்சுதனுக்கு நமஸ்காரம்; அநந்தனுக்கு நமஸ்காரம்; கோவிந்தனுக்கு நமஸ்காரம்.

கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுஸூதனா, த்ரிவிக்ரமா, வாமநா, ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா! உன்னைப் பன்னிரு திருநாமங்களால் போற்றி, என் இந்த்ரியங்களுக்கு ரக்ஷை இடுகின்றேன்!


இந்த ஆசமநீயத்தைச் செய்வதன் மூலம் நமக்கு ஒரு உண்மை புலப்படும். பன்னிரு திருநாமங்களைச் சொல்லி, நமது இந்த்ரியங்களுக்கு ரக்ஷை எதற்காக இடுகிறோம், எந்தெந்த இந்த்ரியத்தில் எந்த அதிதேவதை குடிகொண்டிருக்கிறது என்பதை நாம் மேலே பார்த்தோமல்லவா?


இதன் மூலம், இறைவனின் ஒவ்வொரு வடிவமும், அதிதேவதைகளும் நமது உடலிலேயே உள்ளனர் என்பது நமக்குப் புலப்படுகிறது. சித்தர்கள், யோகிகள், மஹான்கள் இவர்களெல்லாம், “நான் கடவுள்” என்ற பொருள்படும்படி, “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்று ஏன் கூறுகின்றனர் என்பதற்கான காரணம் ஆசமநீயம் செய்தபின் நமக்குப் புரியும்! இந்த, “கடவுள்” என்ற சொல்லையே நாம் இரண்டாகப் பிரித்துப் பொருள் காண வேண்டும். அதாவது, “கட”, “உள்” என்று பிரிக்க வேண்டும். இங்கே, “உள்” என்பதற்கு நம்முடைய “மனம்” என்று பொருள்படும். நம்முடைய மனதை நாம் கடக்க வேண்டும். நம்முடைய சட்டைப் பையில் ரூ.2000 உள்ளது. அது சட்டைப் பையில் உள்ளபோது நம்முடைய கண்களுக்குத் தெரியாது. ஆனால், நம்முடைய மனதிற்கு? நம்மிடம் ரூ.2000 உள்ளது என்ற உணர்வு இருக்குமல்லவா? அவ்வாறு இருப்பதை நாம் எவ்வாறு உறுதி செய்வோம்? சட்டைப் பையிலிருந்து அதைக் கடத்தி, அதை மேசை மேல் வைத்துப் பார்க்கிறோமல்லவா? அதைப் போலவே, நம்முள்ளிருக்கும் கடவுளை நமக்குத் தெரியாது! அக்கடவுளைக் காண வேண்டுமெனில், நம்முடைய மனக்கண்களால் நம்முடைய மனதை ஒரு மேசை மேல் கிடத்தி, அறிவுக்கண்களால் அந்த மனதைப் பார்த்தால், அம்மனத்துள் அடங்கியிருக்கும் நல்ல மற்றும் தீய எண்ணங்களை நம்மால் உணர்ந்து, பட்டியலிட முடியும். நம்முள் இருக்கும் கடவுளைக் காண, அறிவுக்கண்களால் நாம் கண்டறிந்த நல்ல எண்ணங்கள் மற்றும் குணங்களை மேலும் மேம்படுத்த, நம் அறிவின் துணைகொண்டு உறுதியேற்க வேண்டும். அதைப் போலவே, நம் மனத்துள்ளிருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் குணங்களை நம் அறிவின் துணைகொண்டு விலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது ஆன்மா மேம்படும். நம்முள் உறைந்திருக்கும் இறைவடிவங்கள் மற்றும் அதிதேவதைகள் செயல்பட ஆரம்பிப்பார்கள்! பிறகென்ன? அதன்பின் நம்மை எவராலும் தீயவழிகளில் செலுத்த முடியாது! நம்மை பாதிப்பவர்களை நாமும் எளிதில் வெல்லலாம்!


என்ன, நாம் நம்முள்ளிருக்கும் இறைசக்திகளை உணர்ந்து, நாமும் “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்று நம்மைச் சொல்லிக் கொள்ள நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள, செயலில் இறங்கலாமா?


ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள்

(அர்த்தத்துடன்) - தொடரும்!

#ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_அர்த்தத்துடன்_பாகம்_2


ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள் (அர்த்தத்துடன்)


பாகம்-2


ஸந்த்யாவந்தனத்தில் நாம் அடுத்த கட்டத்திற்குப் போகுமுன் ஆசமநம் பற்றி சில செய்திகள்:


அச்யுதாய நம:, அநந்தாய நம:, கோவிந்தாய நம: எனும் இம்மந்த்ரங்கள் உடலிலும், உள்ளத்திலும் உறையும் சகல வ்யாதிகளையும் போக்க வல்லது. இதற்கு “நாமத்ரயீ-வித்யா” என்று பெயர்.


இந்த ஆசமநத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மட்டுமே செய்ய வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு நோக்கி செய்யக் கூடாது. கைகள் முழந்தாள்களுக்கிடையில் அடங்கியிருக்கும்படி, குந்திட்டு உட்கார்ந்து செய்ய வேண்டும். சுண்டுவிரல் மற்றும் கட்டைவிரல்களை விட்டுவிட்டு, மற்ற விரல்களைச் சற்று உள்ளங்கைப் புறமாக வளைத்தால் ஏற்படும் உள்ளங்கைக் குழிவில் சிறிது சிறிதாகத் தீர்த்தத்தை ஏந்தி உட்கொள்ள வேண்டும். மூன்று முறை அங்ஙனம் ஆசமநம் செய்தபின் இருமுறை கையலம்ப வேண்டும். பவித்ரம் அணிந்திருந்தால் அதைக் கழற்றி காதில் வைத்துக் கொண்டு ஆசமநம் செய்துவிட்டு, பின் அதை மீண்டும் அணிந்துகொள்ள வேண்டும். அதன்பின், கேசவ, நாராயண என்னும் பன்னிரு திருநாமங்களைச் சொல்லி, கண், காது முதலிய உறுப்புகளைத் தொட்டு, அனைத்தையும் பரமாத்மாவின் திருப்பணிக்கு உரியனவாக்குக. ஐந்து இந்த்ரியங்களும் உள்முகப்பட்டால், ஆனந்தம் தானாகவே உதிக்கும்!


இனி, கணபதி த்யானம்:


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |

ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே ||


 (விஷ்ணும்) எங்கும் நிறைந்தவரும்; அன்பர்க்குகந்த வடிவம் எடுப்பவரும்;

(சுக்லாம்பரதரம்) வெண்ணிற ஆடை உடுத்தவரும்;

(சசிவர்ணம்) சந்திரனைப் போன்ற ஒளியுடையவரும்;

(சதுர்புஜம்) நான்கு கைகளுடையவரும்;

(ப்ரஸன்ன வதநம்) ஆனந்தம் பொங்கி வழியும் முகமண்டலத்தையுடையவரும்;

ஆகிய (கணபதியை)

(ஸர்வ விக்ந உபசாந்தயே) எல்லா இடையூறுகளிலிருந்தும் விலக்குவதற்காக

(த்யாயேத்) த்யானம் செய்ய வேண்டும்.


இம்மந்திரத்திற்கு இன்னொரு வ்யாக்யாநமும் கூறலாம். ஸம்ஸ்க்ருத இலக்கணப்படி, “ம்” என்று முடிகின்ற பெயர்ச்சொற்களனைத்தும் இரண்டாம் வேற்றுமையில் அமைந்துள்ளன. முதலாம் வேற்றுமை என்பது பெயர்ச்சொல். உதாரணத்திற்கு, “ராம:” என்றால் இராமன் என்ற பெயர்ச்சொல். அதுவே, இரண்டாம் வேற்றுமையில் “ராமம்” என்று வரும். அதற்குப் பொருள், “இராமனை” என்பதாகும். அதன்படி மேற்கண்ட ஸ்லோகத்தைப் பார்த்தால், பொருள் இவ்வாறு கிடைக்கும்:


 (சுக்லாம்பரதரம்) வெண்ணிற ஆடை உடுத்தவரை;

(விஷ்ணும்) விஷ்ணுவை

(சசிவர்ணம்) சந்திரனைப் போன்ற ஒளியுடையவரை;

(சதுர்புஜம்) நான்கு கைகளுடையவரை;

(ப்ரஸன்ன வதநம்) ஆனந்தம் பொங்கி வழியும் முகமண்டலத்தையுடையவரை;

(த்யாயேத்) த்யானிப்பதன் மூலம்

(ஸர்வ விக்ந உபசாந்தயே) எனக்கு வரும் எல்லா இடையூறுகளும் விலகட்டும்!


கணபதி த்யானம் எதற்காக என்றால், அவர் முழுமுதற்கடவுள். எச்செயலையும் தொடங்குவதற்குமுன் அவரை த்யானித்து வேண்டிக் கொள்வதன்மூலம் நாம் மேற்கொள்ளும் எச்செயலும் எவ்விதத் தடையுமின்றி நாம் நம்முடைய மனதில் எண்ணியவாறு செயல்கள் நிறைவேறும் என்பதற்காக.


இரண்டாவது பொருள் என்னவென்றால், இந்த ஸந்த்யாவந்தனத்தில் மந்த்ரங்கள் பெரும்பாலும் விஷ்ணு, ஸூர்யபகவான், நவக்ரஹங்கள், அஷ்டதிக் தேவதைகளை உபாஸித்தலைக் குறித்து உள்ளன. அதிலும் பெரும்பான்மையாக விஷ்ணு மற்றும் ஸூர்யனைப் பற்றியே மந்த்ரங்கள், செயல்கள் உள்ளன. எனவே, நாம் செய்யும் இந்த ஸந்த்யாவந்தனம் முறையாக, அதைச் செய்யும் நோக்கம் நிறைவேறுவதற்காக விஷ்ணுவை த்யானிக்கிறோம் என்றும் பொருள் கொள்ளலாம்.


இந்த த்யானத்தைச் செய்யும்போது, மூன்றுமுறை நம்முடைய இருகரங்களை முஷ்டியாக்கிக் கொண்டு, நம்முடைய வலது மற்றும் இடது நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். “சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்” வரை ஒருமுறையும்; “சதுர்புஜம் ப்ரஸந்நவதநம் த்யாயேத்” வரை இரண்டாம் முறையும்; “ஸர்வவிக்நோப சாந்தயே” வரை மூன்றாம் முறையும் குட்டிக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு குட்டிக் கொள்வதால் நம்முடைய நினைவாற்றலின் நரம்புகள் தூண்டப்பட்டு, நம்முடைய ஞாபகசக்தி அதிகரிக்கும். நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள், நாம் நம்மையறியாமலே செய்யும் ஒரு செயல் நம்முடைய நினைவுக்கு வரும். நம்மிடம் ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி விசாரிக்க, நமக்கு அது குறித்து உடனே நினைவுக்கு வரவில்லையெனில் நாம் என்ன செய்வோம்? நம்முடைய நெற்றிப்பொட்டில் தட்டியவாறே சிந்திப்போமல்லவா? அப்படித் தட்டுவதால் நம்முடைய நினைவாற்றல் நரம்புகள் செயல்பட்டு, நம்முடைய ஆழ்மனதிலுள்ள, நண்பர் விசாரிக்கும் விஷயம் குறித்த செய்தி உடனே நம் நினைவுக்கு வரும்! இவ்வாறு நாம் தட்டாமலே நினைவாற்றலுடன் செய்ய, சொல்ல வேண்டுமென்பதற்காகவே நாம் ஸந்த்யாவந்தனத்தில் கணபதி த்யானத்தின்போது குட்டிக் கொள்கிறோம்.


அடுத்த பகுதியில் ப்ராணாயாமத்தைப் பற்றி நாம் பார்க்கவிருக்கிறோம். இந்தப் ப்ராணாயாமத்தை முறையாகச் செய்வதன்மூலம் நமது உடலிலுள்ள வ்யாதிகள் நீங்கி நாம் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். மருந்தில்லா தீர்க்காயுளுக்கு நம் முன்னோர்கள் செய்து வைத்திருக்கும் இந்த அருமையான ஏற்பாட்டை என்னவென்று சொல்ல!

No comments:

Post a Comment